செய்திகள்
ரிங் ரோடு அமைக்கப்படாததால் பல்லடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
பல்லடத்தில் ரிங் ரோடு அமைக்கப்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
பல்லடம்:
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் காவல் துறை அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
கோவை- திருச்சி.தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், இந்த சாலையில் 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். அதுமட்டுமல்ல, திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் வாகனங்களில் பல்லடம் நகரை கடக்க வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகும். இந்த நிலையில் விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும், திட்டமிடப்பட்ட"ரிங் ரோடு" "பைபாஸ்ரோடு" திட்ட பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால் பல்லடத்தில் தினமும் போக்குவரத்து நெரிசலால் தினமும் வாகன ஓட்டிகள், அவதிப்படுகின்றனர்.
எனவே பல்லடம் நகரில் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழக அரசு திட்டப்பணிகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.