செய்திகள்
கோப்புப்படம்

திருவல்லிக்கேணியில் காமதேனு சூப்பர் மார்க்கெட் உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Published On 2021-01-23 08:55 GMT   |   Update On 2021-01-23 08:55 GMT
சென்னை திருவல்லிக்கேணியில் காமதேனு சூப்பர் மார்க்கெட் உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.) மிக பழமையானது. இதன் மூலம் ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள், சமையல் கியாஸ் விற்பனை, பெட்ரோல் டீசல் விற்பனையகம் போன்றவை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் டி.யு.சி.எஸ். மூலம் நடைபெறும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் படை நேற்று ஒரே நேரத்தில் 4 இடங்களில் சோதனை நடத்தியது. திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் அலுவலகம், சேப்பாக்கம் எல்.பி.ஜி. கியாஸ் விற்பனை மையம், தாம்பரம், பெரியார் நகர் டி.யு.சி.எஸ். கிளை வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் சேப்பாக்கம் கியாஸ் விற்பனை மையத்தில் பணியாற்றும் உதவி விற்பனையாளர் சரவணனிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 865 பறிமுதல் செய்யப்பட்டடது.

தாம்பரம், பெரியார் நகரில் இருந்து ரூ. 54,370 கைப்பற்றப்பட்டது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 235 பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

டி.யு.சி.எஸ். விற்பனை மையங்களில் இருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Tags:    

Similar News