செய்திகள்
கோப்புபடம்

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - நீடாமங்கலம், நன்னிலத்தில் நடந்தது

Published On 2021-01-22 13:18 GMT   |   Update On 2021-01-22 13:18 GMT
நீடாமங்கலம், நன்னிலத்தில் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஓய்வு பெறும் போது ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கக்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரேமா, மாவட்ட பொருளாளர் மாலதி, வட்ட செயலாளர் ஜெயந்தி, ஒன்றிய தலைவர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சின்னையன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

நன்னிலத்தில் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கக் கோரியும், காலமுறை ஊதியம் வழங்க கோரியும் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க ஒன்றிய செயலாளர் வனிதா தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் தவமணி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநில துணைத்தலைவர் திரிபுரசுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Tags:    

Similar News