செய்திகள்
கோப்புபடம்

மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்

Published On 2021-01-21 15:16 GMT   |   Update On 2021-01-21 15:16 GMT
மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற நாகை செல்வராசு எம்.பி. உள்பட 784 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால் சம்பா, தாளடி பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகள், விவசாய தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கங்கள் கூட்டாக அறிவித்தன.

அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை ரவுண்டானாவில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு நாகை செல்வராசு எம்.பி. தலைமை தாங்கினார்.

விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி முன்னிலை வகித்தார். இதில் நகர செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் புலிகேசி, மாதர் சங்க நகர செயலாளர் அன்னபாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர் முருகானந்தம், நிர்வாகிகள் தர்மதாஸ், சுமதி, பாலதண்டாயுதம், சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட செல்வராசு எம்.பி. உள்பட 45 பேரை திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதே போல் ஆண்டிப்பாளையம், மாங்குடி, மாவூர் ஆகிய 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் வையாபுரி, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் பாலு, நகர செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாமணி கடைத்தெருவில் நடந்த போராட்டத்தில் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், நிர்வாகிகள் ராஜேந்திரன், கைலாசம், செல்வராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ராயநல்லூர், கொத்தமங்கலம், மடப்புரம், கட்டிமேடு உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 இடங்களில் நேற்று சாலை மறியல் நடந்தது. நீடாமங்கலத்தில் நடந்த சாலை மறியலுக்கு நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தமிழார்வன் தலைமை தாங்கினார். ஒளிமதியில் நடந்த சாலை மறியலுக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராதா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் ராவணன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பாரதிமோகன், ஒன்றிய செயலாளர் டேவிட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மறியல் காரணமாக 2 இடங்களிலும் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மன்னார்குடி அருகே சவளக்காரனில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அழுகிய நெற்பயிர்களை கையில் பிடித்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அழுகிய நெல்லை கொண்டு பொங்கலிட்டு நிவாரணம் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்திராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மதியம் 1 மணியளவில் விலக்கி கொள்ளப்பட்டது.

மன்னார்குடி நகர குழு சார்பில் மன்னார்குடி பஸ்நிலையம் மற்றும் கீழப்பாலம் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. கீழப்பாலத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் மீனாம்பிகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பஸ் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு நகர துணை செயலாளர் தனிக்கோடி, மாவட்டக்குழு உறுப்பினர் ரத்தினகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மறியல் காரணமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டூரில் நடந்த சாலை மறியலுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, துணைசெயலாளர் செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, கூட்டுறவு வங்கி தலைவர் சிவசண்முகம், சேந்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூரில் களப்பால் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும், தட்டாங்கோவிலில் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதேபோல் ஒரத்தூர், பெருகவாழ்ந்தான், திருமக்கோட்டை ஆகிய இடங்களிலும் சாலை மறியல் நடந்தது. கோட்டூர் பகுதியில் நடந்த மறியல் காரணமாக 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் சந்திர சேகர ஆசாத், நகர செயலாளர் மார்க்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோபாலசமுத்திரம், இடும்பாவனம், நாச்சிகுளம், பின்னத்தூர், எடையூர், பாண்டி ெரயில்வே கேட், வேப்பஞ்சேரி, பாண்டி சத்திரம், கல்லுக்குடி உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியல் நடந்தது.

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி கூத்தாநல்லூர் அருகே உள்ள மூலங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் சதாசிவம் தலைமை தாங்கினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி லெட்சுமாங்குடி, வாழச்சேரி ஆகிய பகுதிகளிலும் சாலை மறியல் நடந்தது.

திருமக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். இதில் திருமக்கோட்டை, பெருமாள் கோவில் நத்தம், மேலநத்தம் வல்லூர், ராதாநரசிம்மபுரம், தென்பரை வடக்கு, தெற்கு, பாலையக்கோட்டை, புதுக்குடி, எளவனூர், சோத்திரியம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள், கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ேகாஷம் எழுப்பினர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 48 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 153 பெண்கள் உள்பட 784 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாகை செல்வராசு எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, உலகநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை தொடர்பான மனுவை அளித்தனர்.
Tags:    

Similar News