செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவது உறுதி- குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவது உறுதி என கள்ளக்குறிச்சியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சா் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். பிரபு எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர்கள் செஞ்சி. ராமச்சந்திரன், சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்தும் எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு குறித்தும் பேசினார்கள்.
முன்னதாக மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ.பேசியதவாது:-
தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததோடு, நமக்கு அரசு மருத்துவக்கல்லூரியையும் உருவாக்கி தந்துள்ளார். தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக கிராம சபை கூட்டம் நடத்தி அ.தி.மு.க.வுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருகிறார். இவரின் பொய் பிரசாரம் இனி மக்கள் மத்தியில் எடுபடாது. வருகின்ற சட்டமன்ற தேர்தலோடு தி.மு.க.வின் அத்தியாயம் முடிந்துவிடும். வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள் அரசு, கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பா, கதிர்.தண்டபாணி, அருணகிரி, பழனி, சந்தோஷ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, மாவட்ட வக்கீல் பிரிவு பொருளாளர் வெற்றி, மாவட்ட கலை பிரிவு செயலாளர் கரிகாலன் ரமேஷ் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.