செய்திகள்
கொள்ளை

சங்கரன்கோவில் அருகே விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2021-01-21 07:56 GMT   |   Update On 2021-01-21 07:56 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த சங்குபட்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி, விவசாயி. இவருக்கு ஆண்டாள் (வயது70) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

இதனால் கணவன்- மனைவி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று மதியம் நாராயணசாமி பொருட்கள் வாங்குவதற்காக திருவேங்கடம் சென்று விட்டார். ஆண்டாள் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் திருவேங்கடம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தினார்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோவில் பதிந்துள்ள கைரேகைகளை ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் ஆய்வு நடந்தது. அது நாராயணசாமி வீட்டில் இருந்து மெயின் ரோடு வரை ஓடி சென்று விட்டு திரும்பியது.

முதற்கட்ட விசாரணையில் நாராயணசாமி பெரும் நிலக்கிழார் என்பதும், அவரிடம் பணம் இருப்பதை நோட்டமிட்டு மர்மநபர்கள் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

தற்போது கொள்ளை நடந்த நாராயணசாமி வீடு ஊருக்கு நடுவே அமைந்துள்ளது. ஆனாலும் பட்டப்பகலில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கிராமம் என்பதால் அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் இல்லை.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
Tags:    

Similar News