செய்திகள்
ஜிகே வாசன்

உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு இலங்கையும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் அறிக்கை

Published On 2021-01-21 07:29 GMT   |   Update On 2021-01-21 07:29 GMT
இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு இலங்கையும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் இருவர் இலங்கை கடற்பகுதியில் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது, வருத்தத்துக்குரியது. கடந்த 18-ந் தேதி தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.

இந்த தாக்குதலில் மீனவர்கள் காயமடைந்ததும், மீன்பிடிச்சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டதும் மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு படகில் சென்ற 4 மீனவர்களின் படகை முழ்கியடித்ததால் அந்த 4 பேரும் கடலில் முழ்கி காணாமல் போய்விட்டார்கள்.

ஆனால் இரண்டு நாள் சென்ற பிறகு நேற்று இலங்கை கடற்பகுதியில் இரண்டு தமிழக மீனவர்கள் உயிரிழந்ததாக இலங்கை பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு இலங்கை கடற்படையினர் தான் காரணமாக இருப்பார்கள் என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்னும் 2 தமிழக மீனவர்களை தேடும் பணியை விரைவுப்படுத்தி அவர்களை பத்திரமாக மீட்க வலியுறுத்த வேண்டும்.

இந்திய அரசு நம் நாட்டின் கடலோர ரோந்து படையினரை அனுப்பி காணாமல் போன 2 மீனவர்களை தேடும் தீவிர பணியில் ஈடுபடுத்த வேண்டும். இந்திய அரசு உயிரிழந்த தமிழக மீனவர்களின் இழப்புக்கும், மூழ்கடிக்கப்பட்ட படகுக்கும் அதிகபட்ச இழப்பீட்டுத்தொகையை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்.

இது போன்ற ஒரு சம்பவம் இனியும் நடைபெறாமல் இருக்க இந்திய அரசு இலங்கை அரசிடம் உத்திரவாதம் பெற வேண்டும்.

இனிமேலும் எப்பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிதீவிர நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

உயிரிழந்த 2 தமிழக மீனவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண த.மா.கா என்றும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News