செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் ரூ.1½ லட்சம்- 7 பவுன் நகை திருட்டு

Published On 2021-01-20 11:37 GMT   |   Update On 2021-01-20 11:37 GMT
வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மற்றும் 7 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 41). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான ஒரு வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கினார். நேற்று காலை எழுந்து சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகை, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோல் அதே தெருவில் வசிக்கும் ராமர்(60) வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம், ஒரு பவுன் நகையையும், வெங்கலம் மேற்குத் தெருவில் உள்ள ஜெயலட்சுமியுடைய(45) கூரை வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். ஜெயகாந்தன்(55) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்தந்த வீட்டை சேர்ந்தவர்கள் அரும்பாவூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு சம்பவங்களில் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News