குற்றாலம் அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
நெல்லை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் சின்னன். இவரது மகன் சிவபிரகாஷ்(வயது 21). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் இலஞ்சியில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிவபிரகாஷ் தனது நண்பர்கள் 9 பேருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் வந்துள்ளார். முதல் நாள் விழாவில் பங்கேற்ற அவர் மறுநாள் தனது நண்பர்களுடன் குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.
அவர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினார். உடனே அவரது நண்பர்கள் குற்றாலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து செங்கோட்டை மற்றும் தென்காசி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சிவபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இடத்தில் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.