செய்திகள்
கோப்புப்படம்

தண்ணீர் லாரி மோதி பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி

Published On 2021-01-19 20:39 GMT   |   Update On 2021-01-19 20:39 GMT
மாதவரம் அருகே பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தண்ணீர் லாரி மோதி பலியானார்.
செங்குன்றம்:

சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் முதல் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் ஹேமவர்ஷினி (வயது 23). இவர் சென்னை அடையாறில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மாதவரம் நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்த போது, தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்பக்கமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறி கிழே விழுந்த அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

இதனால் ஹேமவர்ஷினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் அலமேலு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.
Tags:    

Similar News