செய்திகள்
கோப்புப்படம்

கோவை அருகே வேன்-பஸ் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2021-01-19 17:50 GMT   |   Update On 2021-01-19 17:50 GMT
கோவை அருகே வேன்-பஸ் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கோவை:

கோவை சீரபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ், காவலாளி. இவருடைய மனைவி ராஜாமணி. இவர் தனது மனைவி மற்றும் மகள் வழி பேரன்கள் கிஷோர் (வயது 17), ரிதீஷ் (7) ஆகியோருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அவர்கள் 4 பேரும் நேற்று ஒரு ஆம்னிவேனில் சீரபாளையம் திரும்பினார்கள். வேனை பழனியை சேர்ந்த ஆசிக் (38) என்பவர் ஓட்டினார். அவர்கள் வந்த வேன் கோவை அருகே உள்ள ஈச்சனாரி சந்திப்பு அருகே வந்தது.

அப்போது நாகூரில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற சொகுசு பஸ், ஆம்னிவேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி நின்றது.

மேலும் விபத்துக்குள்ளான வேன் அப்பளம்போல நொறுங்கியது. இதில் முகமது ஆசிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆம்னிவேனில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட ராஜாமணி உள்பட 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவர்களை அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த நடராஜ், கிஷோர், ரிதீஷ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News