செய்திகள்
கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கும், வேலாயுதபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கும் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், ரெயிலில் அடிபட்டு இறந்தவர் சங்கரலிங்கபுரம் 4-வது தெருவைச் சேர்ந்த பிச்சையா மனைவி பூலம்மாள் (வயது 72) என்பதும், அவர் தனது தம்பி கணபதி பாண்டியன் (60) என்பவருடன் குடியிருந்து வந்ததாகவும் தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.