செய்திகள்
திருப்பூர் புறநகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
திருப்பூர் புறநகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரபாண்டி:
திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் (சிறப்பு பிரிவு) அழகுராஜா மற்றும் தாமஸ் ஆல்பர்ட் ஆகியோர் இடுவம்பாளையம் பஸ் நிறுத்தம் பின்புறம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 15 கிலோ புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் ராம்ஜின் பகுதியை சேர்ந்த வாகாராம் (வயது 56) மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தன்சஸ்மல் (32) ஆகியோர் கடந்த 2 மாதங்களாக பல்வேறு மாநிலங்களிலிருந்து கிலோ கணக்கில் புகையிலை பொருட்களை வாங்கி வந்து திருப்பூர் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வீரபாண்டி போலீசார் 15 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் விற்பனைக்காக பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.