செய்திகள்
கேஎஸ் அழகிரி

தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும்: கே.எஸ்.அழகிரி

Published On 2021-01-18 02:20 GMT   |   Update On 2021-01-18 02:20 GMT
தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடரும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
புதுச்சேரி:

புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தனது துறை ரீதியான பல்வேறு கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி வழங்கவும், கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுமெனவும் கடந்த 10-ந் தேதி முதல் சட்டசபை வளாகத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அமைச்சர் கந்தசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதன் பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுக்கு தலைமை உள்ளது. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு பேசி தீர்த்துக்கொள்ள முடியும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடரும். இந்த இரு கட்சிகளும் கொள்கை ரீதியில் ஒற்றுமையாக உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய முடியாத நிலை உள்ளது. கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அங்கிருந்த துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், ‘நமது ஆட்சியில் மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. மக்களை பற்றி யாருக்கும் கவலையில்லை. இப்போது இந்த தர்ணா அவசியமா? மக்களை ஏமாற்றாதீர்கள்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் காரணமாக சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News