செய்திகள்
கைது

நெல்லை அருகே வாலிபர் கொலையில் தொழிலாளி கைது

Published On 2021-01-17 10:44 GMT   |   Update On 2021-01-17 10:44 GMT
நெல்லை அருகே வாலிபர் கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள தாழையூத்து ராம் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 53). தொழிலாளி. இவரது மகன் கிருஷ்ண சுந்தர் (21). இவர்கள் வீட்டு அருகே தொழிலாளி பாலகிருஷ்ணன் (50), அவரது மகன் சேதுராமலிங்கம் (32) ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகையையான கடந்த 14-ந்தேதி அவர்களுக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது.

இருதரப்பினரும் உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பியால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் மாரியப்பன், கிருஷ்ண சுந்தர், வெள்ளத்துரைச்சி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்றொரு தரப்பில் சேதுராமலிங்கம் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த 4 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ண சுந்தர் நேற்று முன்தினம் இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர். மொத்தம் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் பாலகிருஷ்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News