செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

22, 23-ந்தேதிகளில் பிரசாரம்: கோவையில் எடப்பாடி பழனிசாமி 25 இடங்களில் பேசுகிறார்

Published On 2021-01-17 05:07 GMT   |   Update On 2021-01-17 05:07 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
கோவை:

வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் அவர் கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.

22-ந் தேதி காலை 8 மணிக்கு கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதியில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்குகிறார்.

அதைத்தொடர்ந்து செல்வபுரம், குனியமுத்தூர், கரும்புக்கடை, சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட், கிணத்துக்கடவு, கோவில்பாளையம் ஆகிய இடங்களில் பேசுகிறார்.

மதிய உணவுக்கு பின்னர் பிற்பகல் 3 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், ஆனைமலை, மாசாணியம்மன் கோவில், சுல்தான்பேட்டை, சூலூர் வழியாக கொடிசியா வருகிறார். அங்கு இரவு 8 மணிக்கு தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்.

அன்று இரவு அவர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

மறுநாள் (23-ந்தேதி) காலை 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி புலியகுளத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து சிங்காநல்லூர், பீளமேடு புதூர், காளப்பட்டி, அன்னூர் மேட்டுப்பாளையம், ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மதிய உணவு சாப்பிடுகிறார்.

பின்னர் மாலை 3 மணிக்கு பெரியநாயக்கன் பாளையம், துடியலூர், சாய்பாபா கோவில், வடவள்ளி, தொண்டாமுத்தூர், கோனியம்மன் கோவில் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News