செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

தி.மு.க.வின் பொய் பிரசாரம் எடுபடாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2021-01-16 03:47 GMT   |   Update On 2021-01-16 03:47 GMT
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் கபட நாடகம், பொய் பிரசாரம் எடுபடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் சசிகலா இணைய வேண்டும் என்று குருமூர்த்தி கூறியது தொடர்பாக கேட்கிறீர்கள். அது அவரது கருத்து. அதற்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. அ.தி.மு.க. தனித்தன்மையுடனும், யார் எதிர்த்தாலும் வெல்லக்கூடிய சக்தியுடனும் இருக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்களால் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அபரிமிதமாக அதிகரித்துள்ளது. நீர்நிலைகளில் மேற்கொண்ட குடிமராமத்து பணிகள், அம்மா மினி கிளினிக், அம்மா நகரும் ரேஷன் கடை போன்ற எண்ணற்ற திட்டங்கள் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

கொரோனா காலத்திலும் மாணவர்கள் இணையவழியில் கற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தினமும் 2 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கியதையும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏளனம் செய்கிறார். அவர் முன்பு தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறார். ஆனால் யாரும் எதனையும் மறக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த அவலங்களை கிராமம்தோறும் விளக்கி கூறி, தி.மு.க.வை விரட்டி அடிப்போம் என்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம்.

விவசாயிகளின் ரூ.6 ஆயிரம் கோடி கூட்டுறவு கடனை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்தார். தி.மு.க.வை மீண்டும் நம்பி ஏமாற மக்கள் தயாராக இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் கபட நாடகம், பொய் பிரசாரம் எடுபடாது. விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்கு முதல் கையெழுத்திட மட்டுமல்ல, இனி சட்டமன்றத்தில் கையெழுத்திடவும் வர வேண்டிய அவசியம் மு.க.ஸ்டாலினுக்கு இருக்காது.

அ.தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News