செய்திகள்
ஞானதேசிகன்

ஞானதேசிகன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published On 2021-01-15 17:54 GMT   |   Update On 2021-01-15 17:54 GMT
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகனின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் ஞானதேசிகன்( 71). தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராகவும் இருந்து வந்தார். நெஞ்சுவலி காரணமாக நவம்பர் மாதம் 11-ந்தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஞானதேசிகன் இன்று காலமானார்.

2011 முதல் 2014-ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்த ஞானதேசிகன், மாநிலங்களவையின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகனின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

நாடாளுமன்றத்தில் சிறப்பான முறையில் விவாதத்தை முன்வைத்தவர் ஞானதேசிகன். பி.எஸ்.ஞானதேசிகனின் மறைவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு. தலைவர்களே தவறான முடிவு எடுக்கும்போது இது சரிவராது என தைரியமாக கூறுவார் என நாராயணசாமி கூறியுள்ளார்.

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் 


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு. தமாகா-வுக்காக இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் ஞானதேசிகன். மேலும் ஞானதேசிகனின் மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் மறைவு செய்தியால் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் .

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த ஞானதேசிகன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்என கூறி உள்ளார்

தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். யாருடைய மனமும் புண்படாமல் பேசும் சிறந்த பண்பாளர் இயக்கங்களின் எல்லைகளைத் தாண்டி நட்பு பாராட்டியவர் தற்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

தமிழக அரசியலில் அனைத்துக் கட்சியினரிடமும் நட்பு பாராட்டியவர் ஞானதேசிகன். அரசியலில் பதவிக்கு ஆசைப்படாதவர். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பது எப்படி? என்பதற்கு சிறந்த முன்னுதாரனமாக திகழ்ந்தவர் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

டி.டி.வி.தினகரன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் 

பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார் என்ற செய்தி அறிந்தது வருத்தமடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News