செய்திகள்
கொலை

நெல்லை அருகே கோஷ்டி மோதலில் வாலிபர் அடித்து கொலை

Published On 2021-01-15 14:10 GMT   |   Update On 2021-01-15 14:10 GMT
நெல்லை அருகே கோஷ்டி மோதலில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள தாழையூத்து ராம்நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 53). இவரது மகன் கிருஷ்ணசுந்தர் (21). இவர்கள் வீட்டருகே பாலகிருஷ்ணன் (50) அவரது மகன் சேதுராமலிங்கம் (31) ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் இருகுடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்று இருகுடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் திடீர் என்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

இதில் மாரியப்பன், அவரது மகன் கிருஷ்ணசுந்தர், மகள்கள் வெள்ளதுரைச்சி, ஸ்ரீதேவி ஆகிய 4 பேரும் ஒரு கோஷ்டியாகவும், பாலகிருஷ்ணன், அவரது மகன் சேதுராமலிங்கம், உறவினர் வெள்ளதுரை ஆகிய 3 பேர் மற்றொரு கோஷ்டியாகவும் மோதினார்கள்.

இருதரப்பினரும், உருட்டுக்கட்டை, இரும்பு கம்பியால் ஒருவரையொருவர் அடித்து தாக்கினார்கள். இதில் மாரியப்பன், கிருஷ்ணசுந்தர், வெள்ளதுரைச்சி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

எதிர்தரப்பில் சேது ராமலிங்கம் பலத்த காயம் அடைந்தார். காயம் அடைந்த 4 பேருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணசுந்தர் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி சேதுராமலிங்கம், பாலகிருஷ்ணன், வெள்ளதுரை ஆகிய 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதுபோல சேதுராமலிங்கத்தை தாக்கியதாக மாரியப்பன், வெள்ளதுரைச்சி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News