செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜு

நடிகர்களை பார்க்க கூட்டம் வரும், ஆனால் ஓட்டுகள் வராது - அமைச்சர் செல்லூர் ராஜு

Published On 2021-01-11 19:09 GMT   |   Update On 2021-01-11 19:09 GMT
நடிகர் கமலஹாசனை காண மக்கள் கூட்டம் கூடும். ஆனால் அவை ஓட்டுகளாக மாறாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை தனியார் திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:

தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளன. தேர்தலுக்கான வியூகம் உள்ளது. அவர் ஆதரவு தெரிவிப்பார், இவர் ஆதரவு தெரிவிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ரஜினிகாந்துக்கு யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது தெரியும். பஞ்ச பூதங்களில் ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர். உதயநிதி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார். அவர் தன் போக்கில் மாற்றம் செய்துகொள்ள வேண்டும். தந்தை எவ்வழியோ அதையே மகன் செய்கிறார். 

நடிகருக்கு கூட்டம் கூடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 2011-ம் தேர்தலில் குஷ்புவுக்கும் வடிவேலுவுக்கும் கூட்டம் கூடியது. ஆனால் தி.மு.க.வால் ஜெயிக்க முடியவில்லை.

அதனால், நடிகர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறும் என்று நினைக்க முடியாது. நடிகர் கமலஹாசனை காண மக்கள் கூட்டம் கூடும். ஆனால் வாக்குகளாக மாறாது.

எங்களுடன் கூட்டணி அமைப்பவர்கள் வெற்றி பெற நாங்கள் உழைப்போம். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்பவர்களோடு தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News