செய்திகள்
என்னை மேலும் வேதனைப்படுத்தாதீர்கள்... ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்
அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி தன்னை வேதனைப்படுத்த வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்ததால் அவரது ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வெளியிட்ட அறிவுறுத்தலையும் மீறி நேற்று தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ரஜினி ரசிகர்கள், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்து முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும், ரஜினி காந்த் தனது நிலைப்பாட்டை மாற்றி, அரசியல் கட்சி தொடங்க வேண்டும், பெரிய அளவில் பிரசாரம் செய்யாவிட்டாலும், தொலைக்காட்சி வாயிலாக அறிக்கை விட்டால் போதும், மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கூறினர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் மாற்றம் இல்லை. இதற்கான காரணங்களை நான் ஏற்கனவே விளக்கிவிட்டேன்.
எனவே, அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி என்னை மேலும் மேலும் வேதனைப்படுத்த வேண்டாம்.
சென்னையில் கட்டுப்பாடு மற்றும் கண்ணியத்துடன் போராட்டத்தை நடத்தியதற்கு பாராட்டுக்கள். இருந்தாலும் மன்ற தலைமையின் உத்தரவை மீறி போராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது. மன்ற தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்வில் பங்கேற்காதவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு ரஜினி கூறி உள்ளார்.