செய்திகள்
வெங்காய மண்டியில் உள்ள ஒரு குடோனில் வெங்காய மூட்டைகள் குறைவாக இருப்பதை படத்தில் காணலாம்.

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் வெங்காயம் விலை உயர்வு

Published On 2021-01-10 14:45 GMT   |   Update On 2021-01-10 14:45 GMT
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:

சமையலில் முக்கிய பங்கு வகிப்பது பெரிய வெங்காயம் ஆகும். பெரும்பாலான உணவு பொருட்களில் வெங்காயத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், பலரும் சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தை அதிகளவு வாங்குவார்கள்.

திருப்பூரை பொறுத்தவரை வெங்காயம் உள்பட காய்கறிகள் வாங்குவதற்கு பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையத்தை சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு செல்கிறவர்கள் இவற்றை வாங்கி செல்வார்கள்.

தென்னம்பாளையம் சந்தையில் ஏராளமான மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் பெரிய மற்றும் சின்ன வெங்காயம் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கிடையே தற்போது தென்னம்பாளையம் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து வெங்காய வியாபாரிகள் கூறியதாவது:-

தென்னம்பாளையம் சந்தையை பொறுத்தவரை மராட்டியம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயத்தை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். தற்போது அந்த பகுதியில் அதிக மழை பெய்து வருவதால், வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது. இதுபோல் வெங்காய ஏற்றுமதிக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலரும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

இதனால் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால் தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் மொத்த விற்பனையாளர்களுக்கு ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.32-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News