செய்திகள்
மு.க.ஸ்டாலின் - ஜவாஹிருல்லா

மு.க.ஸ்டாலின் உடன் ஜவாஹிருல்லா சந்திப்பு

Published On 2021-01-08 21:40 GMT   |   Update On 2021-01-08 21:46 GMT
மு.க.ஸ்டாலினை சென்னையில் நேற்று ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் கூட்டணி நலன் சார்ந்து மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக இருப்போம் என்று அவர் கூறினார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று சந்தித்து பேசினார்.

பின்னர் எம்.எச்.ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெறவேண்டிய முக்கிய அம்சங்களை மு.க.ஸ்டாலினிடம் எழுத்துப்பூர்வமாக வழங்கினோம்.

தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டி? என்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை. தேர்தல் அறிவித்த பின்னரே இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம். தி.மு.க. கூட்டணியில் பிற இஸ்லாமிய அமைப்புகள் இணைந்தாலும், எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. கூட்டணி நலன் சார்ந்து மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்.

சமூக நீதி, சமூக நல்லிணக்கம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிராக மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு இசைந்துபோகின்ற இடத்தில் அ.தி.மு.க. உள்ளது.

அஞ்சல் துறை கணக்காளர் பணிக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறும் என்று அறிவித்திருப்பது, நாள்தோறும் தமிழர்களின் உரிமையை பறித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் 3.5 சதவீத அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படாமல் ஏராளமான பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான காலி பணி இடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்காக சிறப்பு நியமன முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, பொதுச்செயலாளர் அப்துல் சமது உடன் இருந்தார்.
Tags:    

Similar News