செய்திகள்
திருட்டு

உடன்குடி பகுதியில் 2 கடைகளில் ரூ.1 லட்சம் திருட்டு- மர்ம நபர்கள் கைவரிசை

Published On 2021-01-08 09:58 GMT   |   Update On 2021-01-08 09:58 GMT
உடன்குடி பகுதியில் 2 கடைகளில் ரூ.1 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள சுப்பு ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டி விட்டு ஊருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை இவரது கடையில் 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்திருந்தது. இதுபற்றி பக்கத்து கடைக்காரர்கள் சரவணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்து இருந்த ரூ.90 ஆயிரம் திருட்டு போய் இருந்தது ெதரியவந்தது. இவரது கடைக்கு அருகில் உள்ள மளிகை கடையில் ஒரு பூட்டு உடைக்கப்பட்டும், மற்றொரு பூட்டை உடைக்க முடியாமலும் மர்ம நபர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.

மேலும் உடன்குடி பஸ் நிலையத்திற்கு வெளியே உடன்குடி வைத்திலிங்க புரத்தைச் சேர்ந்த சரவண பெருமாள் என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் புகுந்த மர்ம நபர்கள், அங்கு இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். தொடர்ந்து வில்லி குடியிருப்பு சந்திப்பில் பலசரக்கு கடையிலும், குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள ஒரு கடையிலும் திருட்டு முயற்சி நடந்து உள்ளது.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News