செய்திகள்
மின்சார ரெயில்

வார நாட்களில் கூடுதலாக 160 மின்சார ரெயில் சேவை - தெற்கு ரெயில்வே

Published On 2021-01-02 18:43 GMT   |   Update On 2021-01-02 18:43 GMT
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூடுதலாக 160 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்காக சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் முதலில் இயக்கப்பட்டது. இதற்காக முதலில் 120 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் 150-ஆக அதிகரிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 320 மின்சார ரெயில் சேவையாக அதிகரிக்கப்பட்டு, நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பெண்கள், குழந்தைகள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்பின் பெண்கள், குழந்தைகள் எந்த நேரத்திலும் மின்சார ரெயிலில் பயணம் செய்யலாம் என அறிவித்து, 410 மின்சார ரெயில் சேவைகளாக தெற்கு ரெயில்வே அதிகரித்தது. மேலும், பொதுமக்களும் குறிப்பிட்ட நேரங்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், மின்சார ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே மீண்டும் அதிகரித்தது. அதன்படி, கூடுதலாக 90 மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, மொத்த ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 500-ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் பயணம் செய்ய ஏதுவாக வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூடுதலாக மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ள தகவலின்படி, வரும் 4-ம் தேதி முதல் கூடுதலாக 160 மின்சார ரெயில் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனி வரை கூடுதல் ரெயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News