செய்திகள்
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாட திரண்ட சுற்றுலா பயணிகள்.

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2021-01-02 02:58 GMT   |   Update On 2021-01-02 02:58 GMT
ஆங்கில புத்தாண்டையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.
தொண்டி:

ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனுஷ்கோடி கடற்கரையில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கம்பி பாடு கடற்கரை மற்றும் அரிச்சல்முனை கடற்கரை சாலை பகுதியிலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கும் விதமாக அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கடலில் சுற்றுலாப்பயணிகளை இறங்கவிடாமல் அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதேபோல தொண்டி அருகே உள்ள காரங்காடு சூழல் சுற்றுலா மையம் புத்தாண்டு தினத்தையொட்டி புதிய கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று காலை முதலே இங்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். காலை 10 மணிக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக வனத்துறையினர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரியின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்கி கூறினர். அதனை தொடர்ந்து முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வனத்துறைக்கு சொந்தமான 2 படகுகள் மூலம் சதுப்புநிலக்காடுகளை சுற்றி பார்ப்பதற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சிலர் தனி நபர் படகு சவாரி செய்தனர்.அப்போது வனத்துறையினர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சதுப்பு நில காடுகளின் பயன்களையும் இந்த சதுப்பு நில காடுகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும், வசிக்கவும் உகந்த இடமாக கருதி இங்கு பல நாடுகளில் இருந்து ஆண்டு தோறும் வரும் பறவைககளை பற்றியும் விளக்கம் அளித்தனர். நேற்று தேனி சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, சென்னையை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.

காரங்காட்டில் கடலில் குளிக்க தேவையான வசதிகள், பெண்கள் உடை மாற்ற அறைகள், கூடுதல் கழிப்பறை வசதி, சைவ, அசைவ உணவகம், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து படகு சவாரி தளத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News