செய்திகள்
கோப்புபடம்

பெரம்பலூர் அருகே கார் விபத்தில் ஒருவர் பலி

Published On 2021-01-01 13:44 GMT   |   Update On 2021-01-01 13:44 GMT
பெரம்பலூர் அருகே கார் விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மேற்கு தெருவை சேர்ந்தவர் விக்டோரியஸ் பிரபு (வயது 39). இவர் தனது உறவினர்களான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாவியம்பேட்டை மாரியம்மன் கோவில் ரோட்டை சேர்ந்த ராஜாராமன்(47), திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா விரகாலூர் தெற்கு தெருவை சேர்ந்த அந்தோணிசாமி(36), தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையை சேர்ந்த மரியசெல்வம்(48) ஆகியோருடன் சொந்த வேலையாக சென்னைக்கு காரில் சென்றார்.

பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு சொந்த ஊருக்கு மீண்டும் காரில் புறப்பட்டனர். காரை ராஜாராமன் ஓட்ட, விக்டோரியஸ் பிரபு, அந்தோணிசாமி, மரியசெல்வம் ஆகியோர் காரில் பயணம் செய்தனர். நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தை கடந்து வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி, சாலையின் மறுபக்கத்திற்கு சென்று விபத்துக்குள்ளானது. இதில் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி அந்தோணிசாமி, மரியசெல்வம் ஆகியோர் படுகாயமடைந்தனர். டிரைவர் ராஜாராமன், விக்டோரியஸ் பிரபு ஆகியோர் லேசான காயமடைந்தார்.

இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைச்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களை மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் அந்தோணிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மரியசெல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக விக்டோரியஸ் பிரபு கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News