செய்திகள்
சஞ்சீவ் பானர்ஜி

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம் - ஜனாதிபதி உத்தரவு

Published On 2020-12-31 19:32 GMT   |   Update On 2020-12-31 19:32 GMT
கொல்கத்தா ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சீவ் பானர்ஜியை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி ஏ.பி.சாஹி பதவி ஏற்றார். இவர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிக்கு, கொல்கத்தா ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் பானர்ஜியை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்து பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்டத்துறை ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.

இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சென்னை ஐகோட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை நியமித்து நேற்று உத்தரவிட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, சென்னை ஐகோட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி விரைவில் பதவி ஏற்க உள்ளார். 1961-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி பிறந்த சஞ்சீவ் பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, 1990-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். கொல்கத்தா, டெல்லி, அலகாபாத் என்று பல மாநில ஐகோர்ட்டுகளில் வக்கீலாக பணியாற்றியுள்ளார். சிவில், கம்பெனி சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் நிபுணத்துவம் பெற்றவர். 2006-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்சீவ் பானர்ஜி, தற்போது சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக விரைவில் பதவி ஏற்க உள்ளார்.

இதேபோல் பஞ்சாப், அரியானா மாநில ஐகோர்ட்டு நீதிபதியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த எஸ்.முரளிதர் ஒடிசா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதேபோல் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஹீமா கோக்லியை தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரியை, சிக்கிம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், சிக்கிம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆரூப் கே.கோசுவாமியை ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும் நியமித்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News