செய்திகள்
கைது

களக்காடு அருகே புதுமாப்பிள்ளையை கடத்தி நகை பறித்த 5 பேர் கைது

Published On 2020-12-31 10:14 GMT   |   Update On 2020-12-31 10:14 GMT
களக்காடு அருகே புதுமாப்பிள்ளையை கடத்தி நகை பறித்தது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள காடன்குளம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது29). இவர் சென்னையில் உள்ள ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன் கொரோனா ஊரடங்கால் சென்னையில் சிவராமன் வேலை பார்த்த கடை மூடப்பட்டது. இதனால் அவர் சொந்த ஊருக்கு வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு திருமணமானது.

இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி சிவராமன் மேலசெவலில் நடந்த தனது உறவினர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் ஊருக்கு செல்வதற்காக மேலசெவல் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மேலசடையமான்குளத்தை சேர்ந்த கண்ணன், அவரை தன்னுடன் பைக்கில் வருமாறும், பொன்னாக் குடியில் இறங்கி விடுகிறேன் என்றும் அழைத்தார்.

கண்ணனை ஏற்கனவே திருமண நிகழ்ச்சியில் பார்த்திருந்ததால் சிவராமனும் அவருடன் பைக்கில் ஏறி சென்றார். சிறிது தூரம் சென்றதும், அவர்களது பைக்கில் மேலசடையமான் குளத்தை சேர்ந்த அருணும் ஏறிக்கொண்டார். சிங்கிகுளம்-வடூவூர்பட்டி ரோட்டில் சென்ற போது திடீர் என கண்ணன் பைக்கை அங்குள்ள மண் ரோட்டில் காட்டுப்பாதையில் திருப்பி ஓட்டிச்சென்றார்.

இதுகுறித்து சிவராமன் கேட்ட போது அவர் பதில் ஏதும் கூறாமல் பைக்கை வேகமாக ஓட்டி காட்டுப்பகுதியில் உள்ள ஒரு அறை முன்பு பைக்கை நிறுத்தினர்.

அங்கு மேலசடையமான் குளத்தை சேர்ந்த முருகன் என்ற ரவுடி முருகன், கொம்பையா என்ற மலை கொம்பன், முன்னீர் பள்ளத்தை சேர்ந்த மணி என்ற வாத்துமணி மற்றும் 3 பேர் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி சிவராமன் அணிந்திருந்த 4½ பவுன் எடையுள்ள கைச் செயின், ஒரு பவுன் எடை உள்ள தங்க மோதிரம், 2 கிராம் எடை உள்ள தங்க மோதிரம் மற்றும் செல்போனையும் பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

பறிக்கப்பட்ட மற்றும் செல்போனின் மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய நாங்குநேரி டி.எஸ்.பி. லிசா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சிவராமனிடம் தங்க நகைகளை பறித்தது தொடர்பாக மணி என்ற வாத்துமணி(21), சுடலைக்கண் என்ற கண்ணன் (22) அருண்,(18) கருத்தப்பாண்டி (30), முருகன் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News