செய்திகள்
வடகிழக்கு பருவமழை- அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
குமரிக் கடல், மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீமிசல் (புதுக்கோட்டை), ஆலங்குடி (புதுக்கோட்டை), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), பாபநாசம் (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.