செய்திகள்
கிளாட்சன்- ஜெயசீலி

வங்கியில் கடன் வாங்கி ரூ.3¼ கோடி மோசடி- சென்னையில் மீன் வியாபாரி, மனைவியுடன் கைது

Published On 2020-12-19 02:16 GMT   |   Update On 2020-12-19 02:16 GMT
வங்கியில் கடன் வாங்கி ரூ.3¼ கோடி மோசடி செய்ததாக சென்னையில் மீன் வியாபாரி அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை:

சென்னை அண்ணாசாலை, சவுத் இந்தியன் வங்கி கிளையின் முதன்மை மேலாளர் ஜலாலூதீன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிளாட்சன் (வயது 52). இவர் மீன் மொத்த வியாபாரம் செய்கிறார். தனது தொழில் அபிவிருத்திக்காக எங்கள் வங்கியில், ரூ.3.25 கோடி கடன் பெற்றார். இவர் ஏற்கனவே சென்னை அடையாறு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.2 கோடி கடன் பெற்று, அந்த கடனை எங்கள் வங்கிக்கு மாற்றி, கூடுதலாக ரூ.1.25 கோடி கடன் பெற்றார். மொத்தம் அவர் வாங்கிய ரூ.3.25 கோடி கடனையும் திருப்பி செலுத்தவில்லை. மேலும் அவர் கடன் பெறுவதற்கு கொடுத்த சொத்து ஆவணங்கள் போலியானது என்பதை கண்டுபிடித்து விட்டோம்.

அடையாறு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கொடுத்த சொத்து ஆவணங்களும் போலியானவைதான் என்று தெரிய வந்துள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.3.25 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட கிளாட்சன், அவரது மனைவி ஜெயசீலி (49) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மீன்வியாபாரி கிளாட்சன், அவரது மனைவி ஜெயசீலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News