செய்திகள்
மாணவி தலைமறைவு

போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- வழக்கில் சிக்கிய மாணவி குடும்பத்துடன் தலைமறைவு

Published On 2020-12-19 01:34 GMT   |   Update On 2020-12-19 01:34 GMT
நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றதாக வழக்கு போடப்பட்டுள்ள மாணவி போலீசாரின் 2-வது சம்மனுக்கும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
சென்னை:

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவி ஒருவர் கலந்து கொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, நேரு நகரைச் சேர்ந்த அந்த மாணவியின் பெயர் தீக்‌ஷா (வயது 18). அவரது தந்தையின் பெயர் பாலச்சந்திரன். பல் டாக்டரான இவர் கடந்த 7-ந் தேதி அன்று தனது மகள் தீக்‌ஷாவுடன், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்று கண்டறியப்பட்டது.

அந்த மாணவி நீட் தேர்வில் பெற்ற உண்மையான மதிப்பெண் 27. ஆனால் மருத்துவ கலந்தாய்வில் சமர்ப்பித்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு கம்ப்யூட்டர் மையம் மூலமாக 610 மதிப்பெண் பெற்ற இன்னொரு மாணவியின் சான்றிதழில் பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். அந்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது, சென்னை பெரியமேடு போலீசில், மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் செல்வராஜ் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாணவி, அவரது தந்தை இருவரையும் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பெரிய மேடு போலீசார் 2 முறை சம்மன் அனுப்பினர். முதல் சம்மனுக்கு ஆஜராகாத அவர்கள் இருவரும் நேற்று 2-வது சம்மனுக்கும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வில்லை.

பரமக்குடியில் உள்ள அவர்களது வீடு பூட்டிக்கிடக்கிறது என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதன் மூலம் மாணவி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News