செய்திகள்
மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை செல்ல இன்று முதல் அனுமதி

Published On 2020-12-14 00:12 GMT   |   Update On 2020-12-14 00:12 GMT
8 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் இன்று முதல் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
 
இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் மீனவர் நலச்சங்கம் சார்பில் வந்த வழக்கு ஒன்றில், மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு திறக்கவில்லை என்றால், ஐகோர்ட்டு திறக்க உத்தரவிடும் என்றும் எச்சரித்தனர்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், மெரினா கடற்கரையை டிசம்பர் 14-ம் தேதி திறக்க அரசு திட்டமிட்டு உள்ளது என கோர்ட்டில் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 30-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14-ம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்’ என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
Tags:    

Similar News