செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 16-ந்தேதிக்கு பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2020-12-13 03:18 GMT   |   Update On 2020-12-13 03:18 GMT
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16-ந்தேதிக்கு பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி நிவர் புயல் காரணமாகவும், அதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் புரெவி புயல் உருவாகி தமிழகம் அருகே தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இனி வரக்கூடிய 2 நாட்களும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தொடர்ந்து பெய்த மழை காரணமாகவும், வடகிழக்கு திசையில் இருந்து வீசும் குளிர்காற்று காரணமாகவும் தமிழகத்தில் சில இடங்களில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இது மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்றும், அதேபோல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 16-ந்தேதிக்கு (புதன்கிழமை) பிறகு சில இடங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News