செய்திகள்
கமல்ஹாசன்

சட்டசபை தேர்தல் முதல்கட்ட பிரசாரம் - கமல்ஹாசன் மதுரையில் இன்று தொடக்கம்

Published On 2020-12-13 00:14 GMT   |   Update On 2020-12-13 00:14 GMT
“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் இன்று முதல் கமல்ஹாசனின் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது.
சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்கு தீவிரமாகி வருகின்றன.
 
அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடும் நிலையில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இந்த தேர்தலில் புதிதாக களம் இறங்கி உள்ளனர். இதனால் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் களம் கடும் போட்டியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மதுரையில் தொடங்கிய கமல்ஹாசன் “தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்கிற கோ‌ஷத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.

இந்நிலையில், “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் இன்று முதல் கமல்ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது. மதுரையில் இருந்து பிரசார பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து 4 நாட்கள் அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடையும் கமல்ஹாசன் 3 கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இன்று மாலை கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் கமல்ஹாசன் பின்னர் பெண்கள் அமைப்பினருடன் கலந்துரையாடுகிறார். இதன் பின்னர் தொழில் முனைவோருடனும் அவர் கலந்து ஆலோசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த 3 கூட்டங்களும் தனித்தனியாக உள்அரங்குகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, நாளை காலை மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திறந்த வேனில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திறந்த வேனிலேயே செல்லும் கமல்ஹாசன் குறிப்பிட்ட இடங்களில் தெருமுனைக்கூட்டங்களில் மக்கள் மத்தியில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

15-ம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் இதேபோல் உள் அரங்க கூட்டங்களில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களிடம் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

கடைசி நாளான 16-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளை கமல் சந்திக்கிறார்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு திறந்த வேனில் சென்று மக்களை சந்திக்கும் கமல்ஹாசன் கடைசியாக மீனவர்களை சந்தித்து தனது முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
Tags:    

Similar News