செய்திகள்
சென்னை மெரினா கடற்கரை

மெரினா கடற்கரைக்கு செல்ல நாளை முதல் அனுமதி

Published On 2020-12-12 23:01 GMT   |   Update On 2020-12-12 23:01 GMT
8 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா உள்பட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு நாளை அனுமதி அளிக்கப்பட உள்ளது.
சென்னை:

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் மீனவர் நலச்சங்கம் சார்பில் வந்த வழக்கு ஒன்றில், மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு திறக்கவில்லை என்றால், ஐகோர்ட்டு திறக்க உத்தரவிடும் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் மெரினா கடற்கரையை டிசம்பர் 14-ந்தேதி திறக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 30-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14-ந் தேதி(நாளை) முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். அதன்படி, 8 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா உள்பட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு நாளை அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.
Tags:    

Similar News