செய்திகள்
அர்ஜூன் சம்பத்

ரஜினியின் கரத்தை வலுப்படுத்துவோம்- அர்ஜூன் சம்பத் பேட்டி

Published On 2020-12-12 01:05 GMT   |   Update On 2020-12-12 01:05 GMT
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ரஜினியின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
நாமக்கல்:

இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நாமக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஆன்மிக அரசியல் வெற்றி பெற்றிட இந்து மக்கள் கட்சி சார்பில் புகழ்பெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகிறோம். மாவட்டம் தோறும் ஆன்மிக அரசியல் மாநாடு நடத்தி வருகிறோம். நாளை (இன்று) விழுப்புரத்தில் ஆன்மிக அரசியல் மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் ரஜினி கைகாட்டும் வேட்பாளர் வெற்றி பெற இந்த ஆன்மிக அரசியல் மாநாடு நடத்தப்படுகிறது. 

திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் வெல்ல வேண்டும் என நாமக்கல் ஆஞ்சநேயரிடம் பிரார்த்தனை செய்துள்ளோம். தமிழகத்தில் திராவிட அரசியலுக்கும், ஆன்மிக அரசியலுக்குமான போட்டியில் ஆன்மிக அரசியல்தான் வெல்லும். பா.ஜ.க. தமிழகத்தில் தனித்து போட்டியிட்டாலும் மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி என்பதே இந்து மக்கள் கட்சியின் திட்டம். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் ரஜினியின் கரத்தை வலுப்படுத்துவோம்.

விவசாயி, தான் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று விற்பனை செய்வதற்காகத்தான் இந்த வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி மலிவான அரசியல் செய்கிறது. அதற்கு கெஜ்ரிவால் ஆதரவு தெரிவிக்கிறார். அதற்கு தி.மு.க. ஆதரவு அளிப்பது வருத்தமானது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயி என்பதால், இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மையை அறிந்து ஆதரிக்கிறார். தமிழக விவசாயிகள் அனைவரும் ஆதரிக்கின்றனர். ஆனால் தி.மு.க. உள்நோக்கத்தோடு இதை திசை திருப்புகிறது. 

இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

முன்னதாக அர்ஜூன் சம்பத் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Tags:    

Similar News