செய்திகள்
வருமான வரித்துறை வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் ரூ.7.37 கோடி வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. முட்டுக்காடு பகுதியில் உள்ள சொத்துக்களை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.7.37 கோடி வருவாயை கணக்கில் காட்டவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முடிக்கும் முன்பே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.