செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக பேராசிரியர்கள் சங்கம் கடிதம்

Published On 2020-12-11 02:12 GMT   |   Update On 2020-12-11 02:12 GMT
அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்கம், துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து, சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமனம் செய்யப்பட்டார். அவரும் விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார். இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்கம், துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து, சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் அருள் அறம், செயலாளர் எஸ்.சந்திரமோகன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பேராசிரியர்களாகிய நாங்கள் சூரப்பாவுக்கு எதிராக அல்ல, ஆதரவாக சிலவற்றை முன்வைக்கிறோம். சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தில் நிலவி வந்த மதிப்பெண்களுக்கு பணம் வழங்கும் கலாசாரத்தை முற்றிலும் ஒழித்தார். அவர் துணைவேந்தராக பொறுப்பேற்றது முதல் பல்கலைக்கழகத்தில் தரகர்களின் ஈடுபாடு நிறுத்தப்பட்டதோடு, ஊழலையும் ஒழித்தார்.

துறைத்தலைவர், மைய இயக்குனர்கள், பிற நிர்வாக பதவிகள் அவர் வந்த பிறகு விற்கப்படவில்லை. அவர் வந்த பிறகு, துணைவேந்தர் அறையில் அரசியல்வாதிகள் யாரும் வந்தது கிடையாது. மாநாடுகள், பட்டமளிப்பு விழாவுக்கான செலவுகளை குறைத்தார். கியூ.எஸ். தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் முன்னேற்றம் கண்டது உள்பட பல்வேறு விஷயங்களை அவர் செய்து இருக்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News