செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்.

பாதுகாப்பு வழங்க கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2020-12-10 11:40 GMT   |   Update On 2020-12-10 11:40 GMT
பெற்றோரை மீறி திருமணம் செய்த நிலையில், பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வேப் பம்பட்டு வரதராஜபுரம் ஈ.பி. காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது அத்தை மகனான ஹரிகிருஷ்ணன் (25) என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில் தனலட்சுமியின் காதலை அறிந்த அவரது பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தனலட்சுமி நேற்று தனது காதலன் ஹரிகிருஷ்ணனுடன் சென்று திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த தனலட்சுமியின் பெற்றோர்கள் காதல் ஜோடிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் காதல் ஜோடியை அவர்கள் பிரிக்கவும் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பதறிப்போன தனலட்சுமி தனக்கும் தனது கணவர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க கோரி திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

பின்னர் தனலட்சுமி, கணவர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட அவர், அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் பின்னர் காதல்ஜோடி அங்கிருந்து சென்றனர்.
Tags:    

Similar News