செய்திகள்
எட்டு வழிச்சாலை அமைக்கப்படுமா?- முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
திருவாரூர் சென்ற முதலமைச்சர் பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவாரூர்:
புரெவி புயல் காரணமாக, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால், நாகை மாவட்டத்தில் சுமார் 1,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின. 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது எட்டு வழிச்சாலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:-
*வெளிநாடுகளில் குறைந்தபட்சமே 8 வழிச்சாலைதான் உள்ளது. நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சாலை அவசியம்.
*8 வழிச்சாலை நீண்ட கால திட்டம், இப்போது தொடங்கினால் கூட முடிய 6 ஆண்டுகளாகும்.
*8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், நிலம் கையகப்படுத்தியது மட்டுமே மாநில அரசு.
*விபத்து, கால விரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம்.
*திமுக ஆட்சியில் 17 நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் கொண்டு வந்த போது சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா?
*3 வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள்?
*விருப்பப்பட்டால் மட்டுமே வேளாண் சட்டத்தை தமிழக விவசாயிகள் பயன்படுத்தலாம்.
*விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம்.
*பயனளிக்கும் என்பதால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழக அரசு வரவேற்கிறது.