செய்திகள்
தொழிலாளி கைது

பொள்ளாச்சி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

Published On 2020-12-05 15:40 GMT   |   Update On 2020-12-05 15:40 GMT
பொள்ளாச்சி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவரை பிடிக்க சென்ற போலீசார் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, தோட்டத்தில் சீமார் தயாரிக்க தென்னை ஓலைகளை கிழித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான வெள்ளிங்கிரி (வயது 32) என்பவர் வந்தார். திடீரென்று வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டியின் வாயில் துணியை திணித்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதன்பிறகு வெள்ளிங்கிரி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். வாயில் திணிக்கப்பட்டு இருந்த துணியை எடுத்து விட்டு மூதாட்டி சத்தம் போட்டார். இதை கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, அந்த மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் தலைமை காவலர் ஜெகநாதன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வெள்ளிங்கிரியை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் காசிபட்டினம் அருகே அம்மேகவுண்டனூரில் ஒரு தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் வெள்ளிங்கிரியை போலீசார் பிடிக்க முயன்றனர்.

அப்போது வெள்ளிங்கிரி போலீசாரை நோக்கி கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் துணிச்சலாக சென்று வெள்ளிங்கிரியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News