செய்திகள்
விபத்து

கார் கவிழ்ந்த விபத்தில் பிறந்த குழந்தை உள்பட மேலும் 2 பேர் பலி

Published On 2020-12-05 15:07 GMT   |   Update On 2020-12-05 15:07 GMT
மணிகண்டம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் பிறந்த குழந்தை உள்பட மேலும் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிகண்டம்:

திருச்சி மேலவண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரவணகுமார் என்பவரின் மனைவி நல்லம்மாவிற்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. பின்னர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, அவரது தாய் ஊரான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள விராலூருக்கு ஒரு காரில் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் அழைத்து சென்று கொண்டிருந்தனர். 

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே செங்குறிச்சி பிரிவு ரோடு அருகே சென்றபோது கார் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்லம்மாள், பிறந்த கைக்குழந்தை மற்றும் அவரது 2 வயது மகன், அவரது அண்ணன் உள்பட காரில் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்தனர். 

இதில், அவரது அண்ணன் அயினான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 6 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நல்லம்மாளின் பிறந்த குழந்தை நேற்று முன்தினம் இரவும், அவரது உறவினரான விராலூரை சேர்ந்த பெரியசாமி (வயது 35) என்பவர் நேற்று அதிகாலையும் உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News