செய்திகள்
விபத்து பலி

மணிகண்டம் அருகே சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் விவசாயி பலி

Published On 2020-12-04 04:40 GMT   |   Update On 2020-12-04 04:40 GMT
மணிகண்டம் அருகே சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். பிறந்த குழந்தை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மணிகண்டம்:

திருச்சி மேல வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி நல்லம்மாள் (வயது 26). இவர்களுக்கு தமிழரசன் என்கிற 2 வயது மகன் உள்ளான். இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்த நல்லம்மாவிற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. நேற்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நல்லம்மாளை அவரது தாய் வீடான புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விராலூருக்கு ஒரு வாடகை காரில் உறவினர்கள் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

காரில் நல்லம்மாள், அவரது கை குழந்தை மற்றும் அவரது மகன் தமிழரசன், உறவினர்கள் அயினான்(35) மற்றும் விராலூரை சேர்ந்த வள்ளி (37), பெரியசாமி (35) ஆகிய 6 பேர் இருந்தனர். காரை, விராலிமலை தாலுகா மாங்குடியை சேர்ந்த அழகுசுந்தரம் (40) என்பவர் ஓட்டினார். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே செங்குறிச்சி பிரிவு ரோடு அருகே நேற்று மதியம் சென்றபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையின் மறுபுறம் சென்று கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் சென்ற அனைவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே விவசாயி அயினான் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நல்லம்மாள், அவரது கைக் குழந்தை மற்றும் மகன் தமிழரசன், வள்ளி, பெரியசாமி ஆகிய 5 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் அழகுசுந்தரம் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அயினான் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News