செய்திகள்
கோப்புபடம்

தூத்துக்குடி அருகே, போலி ஆவணம் மூலம் 8½ ஏக்கர் நில மோசடி செய்தவர் கைது

Published On 2020-12-03 14:43 GMT   |   Update On 2020-12-03 14:43 GMT
தூத்துக்குடி அருகே, போலி ஆவணம் மூலம் 8½ ஏக்கர் நிலத்தை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசிங். இவருடைய மனைவி சூரியகலா. இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் 40 செண்ட் நிலம் புதுக்கோட்டையில் உள்ளது. இந்த நிலத்தை கூட்டாம்புளி மெயின் ரோட்டை சேர்ந்த பொன் செல்வராஜ், அவரது மனைவி சுகந்தி, மகன் ரூபன் பால்ராஜ் (32) மற்றும் குலையன்கரிசலைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சுரேந்திரன் ஆகியோர் கூட்டுசதி செய்து, கடந்த 5.1.2007 அன்று சூரியகலா பெயரில் உள்ள நிலத்தை, பொன்செல்வராஜிக்கு உயில் எழுதி கொடுத்ததாக போலி ஆவணம் தயார் செய்து உள்ளனர்.

அந்த ஆவணத்தை வைத்து 11.11.2014 அன்று முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொன்செல்வராஜ் தனது மகன் ரூபன் பால்ராஜிக்கு தானமாக கொடுப்பது போன்று ஆவணம் பதிவு செய்து நிலத்தை மோசடி செய்து உள்ளனர்.

இது குறித்து ஜெயசிங் மகன் குமார் என்பவருக்கு தெரியவந்தது. அவர் கடந்த 2.2.2015 அன்று தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயில் பத்திரம் போலியானது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசார், இந்த வழக்கில் ஈடுபட்ட ரூபன் பால்ராஜை கைது செய்தனர்.
Tags:    

Similar News