செய்திகள்
மழை

மதுரை மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை

Published On 2020-12-03 08:03 GMT   |   Update On 2020-12-03 08:03 GMT
புரெவி புயல் நெருங்கி வருவதையொட்டி மதுரை மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்தது.

மதுரை:

இலங்கையை ஒட்டியுள்ள வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு இலங்கையில் கரை கடந்த புரெவி புயல் நாளை பாம்பன் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் நெருங்கி வருவதையொட்டி மதுரை மாவட்டத்தில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய மதுரை நகரில் விட்டு விட்டு மழை பெய்தது.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறும் பெரியார் பஸ் நிலைய பகுதிகள், 4 மாசி வீதிகள், மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகள், கோரிப் பாளையம், ஆரப் பாளையம், வண்டியூர், மகால் பகுதிகள், காள வாசல், பழங்காநத்தம், மாட்டுத் தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், புதூர், கடச்சனேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பல பகுதிகள் சேறும் சகதியுமாக காணப்பட்டது.

இன்று காலையும் மதுரையில் சாரல் மழை பெய்தது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதன் காரணமாக இன்று காலை வேலைக்கு செல்வோர் உரிய நேரத்தில் பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். பலர் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.

இதேபோல் திருப்பரங் குன்றம், உசிலம்பட்டி, மேலூர், ஒத்தக்கடை, அழகர் கோவில், சமயநல்லூர், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய சாரல் மழையும் பெய்தது.

புயல் எதிரொலியால் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே ராமநாத புரம் மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை வைகை நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது ஏ.வி. பாலம் கீழுள்ள தரைப்பாலம், ஒபுளா படித்துறை தரை பாலத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. எனவே அந்த பகுதியில் பேரிகாட் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். தொடர்ந்து கரையோரப்பகுதிகளில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை மதுரை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிட்டம்பட்டி-18.60

கள்ளந்திரி-26.20

திருமங்கலம்-8.60,

உசிலம்பட்டி-13.20

மதுரை வடக்கு-15.20

விரகனூர்-10.50

மதுரை விமான நிலையம்-10

புலிப்பட்டி-16.60

மேட்டுப்பட்டி-6.30

கள்ளிக்குடி-8.20

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 265. 40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News