செய்திகள்
தற்கொலை

கோவையில் விஷம் குடித்து தாய் தற்கொலை- மகளுக்கு தீவிர சிகிச்சை

Published On 2020-12-02 10:16 GMT   |   Update On 2020-12-02 10:16 GMT
கோவையில் தீராத வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போத்தனூர்:

கோவை குனியமுத்தூர் வெற்றிலைக்காரர் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி செல்வராணி (42). இவர்களுடைய மகள் கீர்த்தி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். செல்வராணிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார்.ஆனாலும் நோய் குணமாக வில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். தான் இறந்துவிட்டால் மகளின் நிலை என்ன ஆகும் என்று நினைத்து, தனது முடிவு பற்றி மகளிடம் கூறினார். அவரும் தனது தாயுடன் தற்கொலை செய்து கொள்ள சம்மதம் அளித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சந்திரசேகர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த செல்வராணியும், மகளும் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பிய சந்திரசேகர், வீட்டுக்குள் மனைவி மற்றும் மகள் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வராணி மற்றும் மகளை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு அவருடைய மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News