செய்திகள்
மழை

தஞ்சையில் மீண்டும் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2020-12-01 09:45 GMT   |   Update On 2020-12-01 09:45 GMT
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை வடகிழக்கு பருவமழை 3-ல் 1 பங்கு மட்டுமே பெய்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. வழக்கமாக அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கி இந்த மழை டிசம்பர் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் மழை தொடங்கி தற்போது பெய்து வருகிறது. சமீபத்தில் பெய்த நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை காணப்பட்டது.

தஞ்சை மாவட்டத்திலும் 2 நாட்கள் மழை நீடித்தது. அதற்கு முன்பு தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலைமுதல் அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.

இருப்பினும் இதுவரை தஞ்சை மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்களும் இன்னும் நிரம்பாமல் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 1098.24 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். இதில் தென்மேற்கு பருவமழை மூலம் 318.19 மில்லி மீட்டரும், வடகிழக்குப்பருவமழை மூலம் 637.02 மில்லி மீட்டரும் மழை பெய்ய வேண்டும்.

ஆனால் தென்மேற்கு பருவமழை இலக்கை விட கூடுதலாக அதாவது 340.02 மில்லி மீட்டர் மழை பெய்தது. இது 106.89 சதவீதம் ஆகும். ஆனால் வடகிழக்குப்பருவமழையில் கிடைக்கக்கூடிய சராசரி அளவான 637.02 மி.மீட்டருக்கு இதுவரை 234.64 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது 36.83 சதவீதம் ஆகும். இது 3-ல் 1 பங்கு மட்டுமே மழை பெய்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் இதுவரை மொத்தம் 635.72 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 57.89 சதவீதம் ஆகும். இந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதலூர் 12, மஞ்சளாறு 7, மதுக்கூர் 5, பட்டுக்கோட்டை 4, திருக்காட்டுப்பள்ளி 4, வல்லம் 3, அய்யம்பேட்டை 3, திருவிடைமருதூர் 3, நெய்வாசல் தென்பாதி 2, கும்பகோணம் 2, ஈச்சன்விடுதி 1, அதிராம்பட்டினம் 1, வெட்டிக்காடு 1, ஒரத்தநாடு 1, தஞ்சை 1.
Tags:    

Similar News