சசிகலா விடுதலை குறித்து இன்று தகவல் வெளியாகும் - முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேட்டி
தருமபுரி:
தருமபுரியில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற தேர்தல் மற்றும் வளர்ச்சி குறித்த ஆய்வு கூட்டம் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பழனியப்பன் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி கட்டமைப்பு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் பொது நிகழ்ச்சியில் கட்சிபற்றி பேசக்கூடிய அரசாக திகழ்கிறது. மேலும் கூட்டணி பற்றி கூட அரசு விழாவில் பேசுகிற அவலம் இருந்து வருகிறது.
சசிகலா சிறையிலிருந்து வருவார் என்ற ஏக்கம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. அவரின் வருகையை எதிர்நோக்கி கட்சியினர் மற்றும் தமிழகமே காத்திருக்கிறது.
சிறையில் இருந்து சசிகலா எப்போது வெளிவருவார் என்று சிறைத்துறை தெரிவிக்க வேண்டும். அதுகுறித்து தகவல் இன்று மாலை தெரியவரும்.
எந்த நேரத்திலும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான். அ.தி.மு.க.வின் பொது செயலாளராக இன்று வரை சசிகலா நீடிக்கிறார்.
மறைந்த ஜெயலலிதாவுக்கு பிறகு அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதற்கான ஒரே தகுதி படைத்தவர் சசிகலா மட்டும்தான். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டது அ.தி.மு.க.வை மீட்கத்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.