செய்திகள்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சென்னை மூலகொத்தளத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடந்தது.
பெரம்பூர்:
டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சென்னை மூலகொத்தளத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மகளிர் அமைப்பினர், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேரணியாக ராயபுரம் மண்டல அலுவலகம் எதிரே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வண்ணாரப்பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.
அதேபோல் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிமேகலை தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து ஊர்வலமாக சென்று கோஷமிட்டனர்.